திருப்பூர், டிச. 9: திருப்பூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் கனகராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான பொது மக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் தொற்று நோய் வகையாக இருப்பதால் வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வரும்போதும் உணவு சாப்பிடுவதற்கு முன்பும் சோப்பு போட்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். சுத்தமான காய்ச்சிய குடிநீரையே பயன்படுத்த வேண்டும்.
இந்த வகை காய்ச்சலால் பொதுமக்களுக்கு தலைவலி உடல் வலி மற்றும் சுவையின்மை போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த காய்ச்சல் தொடர்பாக மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இது மழைக்காலங்களில் வரும் சாதாரண வைரஸ் காய்ச்சல் தான். இந்த காய்ச்சல் குறைந்தது 5 முதல் 7 நாட்களுக்கு இருக்கும். அடுத்த ஒரு வார காலத்திற்கு உடல் வலி சோர்வு ஏற்படும். அதற்கு புரதச்சத்துள்ள உணவுகளையும் நீர் ஆகாரங்களையும் அதிக அளவில் எடுத்துக்கொண்டு பொதுமக்கள் தங்களுடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும்.
இதுபோன்ற சமயங்களில் பொதுமக்கள் சுயமாக மருத்துவம் பார்ப்பதும் தனியார் மருந்து கடைகளில் மருந்துகள் வாங்கி உட்கொள்வதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டும். மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் மாநகராட்சி பகுதிகளிலும், உள்ளாட்சி பகுதிகளிலும், நகராட்சி பகுதிகளிலும் நோய்களை பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த காய்ச்சலுக்கான மருந்துகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை: இணை இயக்குனர் அறிவுரை appeared first on Dinakaran.