சென்னை: மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீண்டு வர முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதியளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயலால் கடந்த டிச.2 முதல் 4ம் தேதி வரை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழை என்பது, 47 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிலான பெருமழையாகும். இந்த இயற்கைப் பேரிடரால் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரிடர் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிடர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள பேரிடராகும். அதேபோல், மழைநீர் வடிகால் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தி இருந்ததால்தான் பேரழிவு தவிர்க்கப்பட்டது.
மேலும், அனைத்து துறைகளும் பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்ததும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வைத்திருந்ததும் இணைந்து மக்களை காத்துள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற்ற மீட்பு பணிகளின் காரணமாக 3 நாட்களுக்குள் பெரும்பாலான இடங்கள் மீட்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளில் மீட்பு பணி நடந்து வருகிறது. இத்தகைய அசாதாரண நேரத்தில் அனைத்து தரப்பும் மக்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த பேரிடர் பாதிப்பிலிருந்து மக்கள் மீள்வதற்கு உதவியாக நல்லுள்ளங்கள் பலர் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தங்களுடைய பங்களிப்பை வழங்குகின்றனர். அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த இயற்கை பேரிடரிலிருந்து மீள்வதற்கான கூடுதல் நிதி ஆதாரங்களை திரட்ட வேண்டியது அவசியமாகிறது.
எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம். இச்சூழலில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட வேண்டுமென உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன். அதன் தொடக்கமாக என்னுடைய ஒரு மாத கால ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குகிறேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களுடைய ஒரு மாத கால ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
The post புயல் வெள்ள பாதிப்புக்கு உதவ ஒரு மாத ஊதியம் வழங்கிய மு.க.ஸ்டாலின்: எம்.பி, எம்எல்ஏக்களும் நிதி அளிக்க வேண்டுகோள் appeared first on Dinakaran.
