சிவகாசி, டிச.8: தினகரன் செய்தி எதிரொலியாக சிவகாசியில் சாலைகளில் குவிந்து கிடந்த கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டன. சிவகாசி நகர் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது சேதமடைந்துள்ள சாலைகளை பெயர்த்தெடுத்து புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டது. நகரில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் செல்லும் பிரதான சாலையான சேர்மன் சண்முக நாடார் சாலையோரத்தில் குவியல் குவியலாக பெயர்த்து எடுக்கப்பட்ட சாலை கழிவுகளும் பல்வேறு இடங்களில் கட்டிடங்களை புதுப்பிப்பதற்காக அகற்றப்படும் பழைய கட்டிட கழிவுகளும் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
சாலையின் நடுப்பகுதி வரை கழிவுகள் சரிந்து கிடந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். சாலைகளில் கொட்டப்பட்டுள்ள கட்டிடக் கழிவுகளை முறையாக அகற்றி வேறு பகுதிகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றும் மாநகராட்சி பகுதியிலும், முக்கிய பிரதான சாலையோரத்தில் கட்டிடக் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் தினகரன் நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து சிவகாசி சேர்மன் சண்முகநாடார் சாலையில் குவிந்து கிடந்த கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post சாலையோரங்களில் குவிந்து கிடந்த கட்டிட கழிவுகள் அகற்றம் appeared first on Dinakaran.
