×

ஐதராபாத்தில் புற்றுநோய்க்கு என போலி மருந்து தயாரித்து புழக்கத்தில் விட்ட கும்பல் கைது: ரூ.4.35 கோடி மருந்துகள் பறிமுதல்

திருமலை: ஐதராபாத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்து என கூறி போலி மருந்து தயாரித்து புழக்கத்தில் விட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4.35 கோடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்பு நிறுவனம் என கூறி ஆஸ்ட்ரிகா ஹெல்த் கேர் என்ற பெயரில் ஒரு நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் போலி மற்றும் கலப்பட மருந்துகள் தயாரித்து சந்தையில் விற்பதாக கடந்த 2ம்தேதி மாநில மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் மருந்து கட்டுப்பாட்டு துறையின் விஜிலென்ஸ் தனிப்படையினர் அந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போலி மருந்துகள் தயாரித்து அவற்றை புழக்கத்தில் விட்டு வந்தது தெரியவந்தது. அந்த நிறுவனத்தின் முகவரியும் போலி என தெரிந்தது. மேலும் போலி மருந்துகளை டெலிவரி செய்து வரும் கூரியர் நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது. மொத்தமாக 3 கிடங்குகளில் போலி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை மருந்து கட்டுப்பாட்டு துறையின் விஜிலென்ஸ் தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.

இதன் மொத்த மதிப்பு ரூ.4 கோடியே 35 லட்சமாகும். மொத்தம் 36 வகையான போலி மருந்துகளை தயாரித்து சந்தையில் விற்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.இதுதொடர்பாக அந்த கும்பலை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களது விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. முக்கிய குற்றவாளியான ஆஸ்ட்ரா ஹெல்த்கேர் இயக்குனர் கே.சதீஷ்ரெட்டி என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். இத்தகவலை தெலங்கானா மருந்து கட்டுப்பாட்டு துறையின் இயக்குநர் கமலஹாசன் நேற்றிரவு தெரிவித்தார்.

The post ஐதராபாத்தில் புற்றுநோய்க்கு என போலி மருந்து தயாரித்து புழக்கத்தில் விட்ட கும்பல் கைது: ரூ.4.35 கோடி மருந்துகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Thirumalai ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகை...