×

யுஜிசி உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு பல்கலை, கல்லூரி வளாகத்தில் செல்பி பாயிண்ட் அமைப்பதா?: காங். தலைவர் ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

புதுடெல்லி: பிரதமர் மோடி சரிந்து கொண்டுள்ள தன் பிம்பத்தை காப்பாற்ற செய்யும் சுயவிளம்பரங்களால் மக்கள் சோர்வடைந்துள்ளதாக காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது. நாடு முழுவதுமுள்ள பல்கலை கழகங்கள், கல்லூரிகள் பல்வேறு துறைகளில் இந்தியாவின் சாதனைகள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வளாகத்தில் உள்ள முக்கிய இடங்களில் செல்ஃபி பாயிண்டுகளை அமைக்க பல்கலை கழக மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது. இதை காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் ட்விட்டர் பதிவில், “மோடியின் ஆட்சியில் முதலில் ராணுவத்திடம் செல்ஃபி பாயிண்ட்களை அமைக்க கேட்டு கொள்ளப்பட்டது. பின்னர் ஐஏஎஸ் அதிகாரிகள், பிற அரசுதுறை மூத்த அதிகாரிகளை ரத யாத்திரை நடத்த சொன்னார்கள். இப்போது செல்ஃபி பாயிண்ட்களை அமைக்க பல்கலை கழகம், கல்லூரிகள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளன.

சந்திரயான்-3 தரையிறங்கும்போது வௌிநாட்டில் இருந்து தன் முகத்தை நேரலையில் காண்பித்தார். அதற்குமுன் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் தன் படத்தை ஒட்டும்படி மோடி கூறினார். இவை எல்லாம் ஒருசில உதாரணங்கள்தான். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு எந்தவொரு நல்லதையும் மோடி செய்யவில்லை. இதனால் சரிந்து விழுந்து கொண்டுள்ள தன் பிம்பத்தை காப்பாற்றி கொள்ள எல்லாவற்றையும் மோடி செய்கிறார். மோடிக்கு, 2024 மக்களவை தேர்தலில் மக்கள் சரியான பதிலை கொடுப்பார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

பிஎம்=போட்டோ மந்திரி
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரைன் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில்,’ பிஎம் = போட்டோ மந்திரி. பிரதமர் மோடி அவர்களே, உங்களுக்குத் தெரியுமா, உங்கள் படத்தின் பின்னணியில் யுஜிசி பல்கலைக்கழகங்கள் ‘செல்பி பாயிண்ட்’ அமைக்கக் கேட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post யுஜிசி உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு பல்கலை, கல்லூரி வளாகத்தில் செல்பி பாயிண்ட் அமைப்பதா?: காங். தலைவர் ஜெய்ராம் ரமேஷ் காட்டம் appeared first on Dinakaran.

Tags : UGC ,Congress ,President ,Jairam Ramesh Kattam ,New Delhi ,Modi ,
× RELATED கட்டணத்தை திருப்பி அளிக்காத கல்வி...