சென்னை: தமிழகத்தில் புயல் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது. அதே நேரம் சென்னை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கனமழை இருக்கும். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார். சென்னை, எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளபடி, இன்று (3ம் தேதி) புயல் உருவாகி, 4ம் தேதி சென்னை அருகில் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்க உள்ளது.
இதனால் ஆந்திராவில் பெரிய பாதிப்பு இருக்கும். சென்னை, திருவள்ளூர் பகுதியில் பலத்த கனமழை பெய்து, அதனால் பாதிப்பு இருக்கும். சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. மழை அதிகம் பாதிக்கும் பகுதிகளில் உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட மத்திய, மாநில பேரிடர் மீட்பு படையினர் 425 பேரை தயார் நிலையில் வைத்திருக்கிறோம். புயல் சென்னை அருகே கடக்கும் நேரத்தில் மக்கள் வெளியே வராமல் இருக்க வேண்டும். வீட்டில் உள்ள விலைஉயர்ந்த பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.
மின்சாரம் போகிற பாதைகளை கடக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த புயல் வரும்போது மரங்கள் விழும். உடனடியாக மரங்களை அகற்ற தகுந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. புயல் சென்னைக்குள் வராமல் கடற்கரை பகுதி வழியாக ஆந்திரா செல்கிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பாதிக்கும் பகுதிகளில் பேரிடர் மீட்பு குழு தயாராக வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் காற்றோடு, மழை இருக்கும். தமிழகத்தில் மழை காரணமாக இதுவரை 5 பேர் இறந்துள்ளனர். 98 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. குடிசை வீடுகள் 405 பாதிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமாக உடனடியாக ரூ.4 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. புயல், மழை பாதிக்கும் பகுதிகளில் நிவாரண முகாம்கள் தயாராக உள்ளது. அணைகளில் தண்ணீர் திறந்துவிடும்போது முன்னெச்சரிக்கை கொடுக்கப்படும். கடற்கரை பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள். கடற்கரை ஓரமாக 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 4967 நிவாரண முகாம்களும் தயாராக வைத்துள்ளோம். சென்னையில் 162 முகாம்கள் உள்ளது. இந்த முகாம்களில் 1 லட்சத்து 13 ஆயிரம் பேர் தங்கும் வசதி உள்ளது என்றார்.
The post தமிழ்நாட்டில் புயல் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்யும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுரை appeared first on Dinakaran.