![]()
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைதானது பற்றி பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் மருத்துவர் சுரேஷ்பாபு என்பவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் தெரிவிக்கபப்ட்டுள்ளது. வழக்கில் இருந்து மருத்துவர் சுரேஷ்பாபுவை காப்பாற்றுவதாக கூறி அமலாக்கத்துறை அதிகாரி திவாரி ரூ.3கோடி லஞ்சம் கேட்டுள்ளார். முதல் தவணையாக கடந்த மாதம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி மீண்டும் ரூ.31 லட்சம் பணம் கேட்டதால் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் அறிவுறுத்தியபடி ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்தபோது அமலாக்கத்துறை அதிகாரி கையும் களவுமாக சிக்கினார். திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரில் வைத்து லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கினார்.
லஞ்சப் பணத்துடன் தப்பிச் செல்ல முயன்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழ்நாடு போலீசார் விரட்டிச் சென்று மடக்கினர் . பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் 12 மணி நேரத்துக்கும் மேலாக துருவித் துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் ராஜஸ்தானில் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை அம்மாநில போலீசார் கைது செய்தனர். மிரட்டி பணம் பறிக்கும் புகாரில் அடுத்தடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாகக் கூறி திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை அமலாக்கத்துறையைச் சேர்ந்த அதிகாரி அங்கிட் திவாரி என்பவர் 20 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார். இது குறித்து மருத்துவர் ஏற்கனவே அளித்த புகாரின் பேரில் தகவலறிந்து அங்கு வந்த திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான போலீசார், அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியின் காரிலிருந்து 20 லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தைக் கைப்பற்றி அவரையும் கைது செய்தனர். பின்னர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து சுமார் 6 மணி நேரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது ஏலச் சீட்டு மோசடி விவகாரத்தில் குற்றவாளியைக் கைது செய்யாமல் இருக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு பேர் ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர். ஆனால் ரூ. 15 லட்சம்தான் கொடுக்க முடியும் என்று குற்றவாளி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ரூ.15 லட்சம் பணத்தை வாங்கியபோது அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு பேரையும் கையும் களவுமாக ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவமும் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
The post மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை appeared first on Dinakaran.
