×

சென்னை-புனே சென்ற ரயிலில் 40 பயணிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு: ரயில்வே அதிகாரிகள் விசாரணை

மும்பை: சென்னையில் இருந்து புனே சென்ற ரயிலில் உணவு ஒவ்வாமை காரணமாக 40 பயணிகளுக்கு நள்ளிரவில் திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பாரத் கவுரவ் ரயிலில் சுமார் 1000 பேர் இருந்துள்ளனர். அந்த ரயிலில் பயணித்தவர்களில் 40 பேருக்கு நள்ளிரவில் உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயில், தனியாரால் முன்பதிவு செய்யப்பட்டு, குஜராத் மாநிலத்தில் உள்ள வழிபாட்டுத் தலத்துக்குச் சென்றுகொண்டிருந்தவர்கள் பயணித்திருந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த ரயிலில் 40 பயணிகளுக்கும் ஒரே நேரத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இரவு 10 மணியளவில் புனே ரயில் நிலைய அதிகாரிகளுக்கு இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர், ரயில் புனே ரயில் நிலையத்தை அடைந்ததும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரயில் புனே சென்றவுடன் உடல்நலம் பாதிக்கப்பட்ட பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றுள்ளது. 40 பயணிகளுக்கும் ஒரே நேரத்தில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த ரயிலில், எந்த உணவக வசதியும் இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். பயணிகள் நடுவழியில்தான் உணவு வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். அது எங்கிருந்து வந்தது என்பதை ஆராய்ந்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

The post சென்னை-புனே சென்ற ரயிலில் 40 பயணிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு: ரயில்வே அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pune ,Mumbai ,Dinakaran ,
× RELATED மராட்டிய மாநிலம் புனே நகரில் பெய்து வரும் கனமழைக்கு 4 பேர் உயிரிழப்பு