×

ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவோம் முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு: காலணி உற்பத்தி தொழிற்சாலையை திறந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது, எனவே ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டத்தில் காலணி உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து பேசினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள ஜேஆர் ஒன் காலணி உற்பத்தி தொழிற்சாலையை, சென்னை முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்து பேசியதாவது:
கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான், பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் அமைக்கப்பட்டிருக்கின்ற சிப்காட் தொழில் பூங்காவை திறந்து வைத்து, ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டினேன். சரியாக ஓராண்டு காலத்தில் துவக்க விழாவில் பேசுவதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. முதலீட்டாளர்களின் முதல் தேர்வு, தமிழ்நாடு. மாநிலத்தில் முதலீடுகளுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதுதான் இதற்கு முக்கியமான காரணம். இங்கே பிசினஸ் செய்வது எவ்வளவு எளிதாக இருக்கிறது என்பதும், முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு எப்படி திகழ்கின்றது என்பதற்கும் இது கண்கூடான சாட்சி.

இதுமாதிரியான வளர்ச்சியை பார்க்கும்போது, 2030ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற நம்முடைய இலக்கை அடைகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை எங்களுக்கு வளர்ந்து கொண்டே போகிறது. இந்த துறையில், நம்முடைய தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்த வேண்டும், இன்னும் பல பன்னாட்டு நிறுவனங்களை ஈர்த்திட வேண்டும் என்ற உந்துதல் காரணமாக, நமது அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில், இவ்வளவு சிறப்பான திட்டத்திற்கான திறப்பு விழா நடைபெறுகிறது. “பரவலான வளர்ச்சியே பார் போற்றும் வளர்ச்சி. சீரான வளர்ச்சியே சிறப்பான வளர்ச்சி” என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு.
பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடுகளை ஈர்த்திட அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பலன் அளிக்கின்ற வகையில், இந்த திட்டத்திற்கான திறப்பு விழா இன்றைக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சார்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இன்றைக்கு, முதற்கட்டமாக, ₹400 கோடி மற்றும் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், கோத்தாரி குழுமத்தை சார்ந்த ஜேஆர் ஒன் கோத்தாரி காலணி உற்பத்தி தொழிற்சாலை துவக்கி வைக்கப்படுகிறது. 2028க்குள், கோத்தாரி ஃபீனிக்ஸ் நிறுவனம், மேலும் ₹2,440 கோடி முதலீடு மற்றும் 29 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு என்று விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டிருக்கிறது. இவை எல்லாம் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

இதற்கெல்லாம் மணிமகுடமாக, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, வருகிற ஜனவரி மாதம் சென்னையில் நடத்த இருக்கிறோம். உங்களை போன்ற நிறுவனங்களோடு சேர்ந்துதான் இந்த மாநாட்டை நடத்த இருக்கிறோம். உலகம் முழுக்க இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர இருக்கின்றன. அதற்கு முன்பாகவே, ஃபீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம், இந்த அதிநவீன உற்பத்தி திட்டத்தை தொடங்கி இருக்கிறது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. சொல்லப்போனால், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னதாகவே, பல நிறுவனங்களோடு துவக்க விழாவை நான் சமீபத்தில் மேற்கொண்டிருக்கிறேன்.

உங்கள் தொழில் முயற்சி வெற்றி பெறவும், உங்களுடைய திட்டங்கள் மென்மேலும் வளர்ச்சி பெற்றிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இந்த தொழில் மேலும் சிறப்படைய அனைத்து உதவிகளையும் இந்த அரசு உறுதியாக செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், டி.ஆர்.பி.ராஜா, எம்பிக்கள் ஆ.ராசா, திருமாவளவன், எம்எல்ஏ பிரபாகரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண்ராய், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குநர் விஷ்ணு, சிப்காட் நிறுவன மேலாண்மை இயக்குநர் செந்தில்ராஜ், பெரம்பலூர் கலெக்டர் கற்பகம், ஃபீனிக்ஸ் கோத்தாரி நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜாங் ராங் வு, ஃபீனிக்ஸ் கோத்தாரி நிறுவன தலைவர் ஜின்னா ரபீக் அஹமத், ஜேஆர் ஒன் இயக்குநர் ஜாங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ₹400 கோடியில் காலணி பூங்கா
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில், ₹400 கோடி செலவில் 250 ஏக்கர் பரப்பளவில் காலணி உற்பத்தி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிப்காட், சிட்கோ மற்றும் பொது – தனியார் கூட்டாண்மை மூலம், 30-50 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்காக்கள் வடிவில் ஆயத்த தொழில் கூடங்களுடன் புதிய தோல் அல்லாத காலணி உற்பத்திக்கான பசுமை தொகுப்புகளை அரசு உருவாக்க இருக்கிறது. வளர்ச்சி திட்டங்கள் என்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தோல் மற்றும் காலணி துறைகளை பொறுத்தவரைக்கும், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-ஐ நான் வெளியிட்டேன். இந்த நடவடிக்கைகளுக்கு பிறகு, இந்த துறையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

n முதல்கட்டமாக ₹400 கோடி முதலீட்டில் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், கோத்தாரி குழுமத்தை சார்ந்த ஜேஆர் ஒன் கோத்தாரி காலணி உற்பத்தி தொழிற்சாலை துவக்கி வைக்கப்படுகிறது.
n 2028க்குள், கோத்தாரி ஃபீனிக்ஸ் நிறுவனம், மேலும் ₹2,440 கோடி முதலீடடில் 29 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

The post ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவோம் முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு: காலணி உற்பத்தி தொழிற்சாலையை திறந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,
× RELATED டெல்லி பயணம் ரத்து: புதிய தமிழ்நாடு...