பொன்னேரி: மீஞ்சூர் அருகே இருசக்கர வாகனங்களில் வாலிபர்கள் அதி வேகமாக இயக்கியும், வாகனத்தின் சக்கரத்தை அந்தரத்தில் தூக்கியபடியும் சாகசம். ஹெல்மெட் கூட அணியாமல் ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபடுபவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் அவ்வப்போது இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு சில நாட்களில் ரோந்து பணிகளை மேற்கொள்ளும் காவல்துறையினர் அவர்களை எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில், நேற்று வழுதிகைமேடு சுங்கச்சாவடி அருகே உள்ள லாரி நிறுத்தும் சர்வீஸ் சாலையில் இளைஞர்கள் சிலர் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை சீறிப்பாயும் வகையில் அதிவேகமாக இயக்கியும், அதிவேகமாக பயணித்து வாகனத்தின் முன்பக்க சக்கரத்தையும், அதற்கு பிறகு பின்பக்க சக்கரத்தையும் தூக்கியபடி சாகசத்தில் ஈடுபட்டனர்.
மேலும், லாரிகள் நிறுத்தி வைக்கப்படும் சர்வீஸ் சாலையில், சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்களில் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணியாமல் அபாயகரமாக வாகனத்தை இயக்குகின்றனர். அண்மையில் அபாயகரமாக வாகனத்தை ஓட்டி விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசனின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்தது போல, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை இயக்கும் இளைஞர்கள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
The post வழுதிகைமேடு சுங்கச்சாவடி அருகே வாலிபர்கள் பைக் சாகசம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.
