தண்டையார்பேட்டை: புரட்டாசி மாதம் முன்னிட்டு அனைத்து மீன்மார்க்கெட், கறிக்கடைகளில் விற்பனை படுமந்தமாக உள்ளது. இதனால் வியாபாரிகள், மீனவர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். காசிமேடு மீன்மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் மிகவும் குறைவாக உள்ளது. வியாபாரிகள் வருகையும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதால் மீன்கள் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும் வாங்குவதற்கு தயாராக இல்லை. இதனால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், காசிமேடு மீன்மார்க்கெட்டில் இன்று காலை மொசப்பாறை மீன்கள் நிறைய பிடித்துவரப்பட்டது. பொதுவாக 18 கிலோ கொண்ட ஒரு கூடை மீன் 6000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். ஆனால் இன்று ஒரு கூடை விலை 300 முதல் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையிலும் வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதுபோல் சங்கரா மீன் பொதுவாக 400 முதல் 500க்கு விற்பனை செய்யப்படும். இன்று 100 முதல் 150க்கு விற்பனை செய்யப்பட்டும் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதுபோல் நண்டு, கடுமா, இறால் ஆகியவற்றின் விலைகளும் பாதிக்கு மேல் குறைந்தும் விற்பனையாகவில்லை. இதனால் மீனவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். புரட்டாசி மாதம் முடிய இன்னும் 3 வாரங்கள் உள்ளதால் அதுவரை இதே நிலை நீடிக்கும்.
இதுபற்றி மீனவர்கள் கூறும்போது, ‘’டீசல் விலை உயர்வாக உள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொண்டு கடலில் சில நாட்கள் தங்கி மீன் பிடித்து வருகிறோம். கரைக்கு வந்தாலும் எங்களுக்கு போதிய வருவாய் இல்லை. புரட்டாசி மாசம் என்பதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கடலில் மீன் பிடிக்க சென்று வந்த செலவை கூட எங்களால் சம்பாதிக்க முடியவில்லை. இன்னும் 3 வாரங்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால் அப்போது எங்களால் மீன் பிடி தொழிலுக்கு செல்வது கடினம். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.
The post காசிமேடு மார்க்கெட்டில் மீன்கள் விற்பனை கடும் சரிவு; வாழ்வாதாரம் பாதிப்பு: மீனவர்கள் தவிப்பு appeared first on Dinakaran.
