×

மதுபோதையில் காரை ஓட்டி டூவீலர்கள் மீது மோதிய 2 பேருக்கு அடி, உதை

மதுரை, மார்ச் 21: மதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து பைபாஸ் ரோடு வழியாக திண்டுக்கல் நோக்கி அதிவேகமாக நேற்று இரவு சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, பழங்காநத்தம் அருகே ரோட்டில் சென்ற டூவீலர்கள் மீது திடீரென அந்த கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது. அதேபோல் பைபாஸ் ரோட்டில் தொடர்ந்து சென்ற அந்த கார், மேலும் ஒரு கார் மற்றும் சில டூவீலர்களில் மீது மோதியது. இதில் அவற்றில் சென்ற 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் நடந்த சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் அந்த காரை பொதுமக்கள் வாகனங்களில் விரட்டிச்சென்று பெத்தானியபுரம் குரு தியேட்டர் அருகே மடக்கிப்பிடித்தனர்.

அப்போது, அந்த காரில் இருந்த 2 பேரும் மது போதையில் இருப்பது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே அந்த காரில் இருந்த மேலும் இருவர் அங்கிருந்து தப்பினர். இதற்கிடையே அங்கு வந்த போலீசார் காரில் இருந்தவர்களை மீட்டனர். கார் மோதியதிலும், பொதுமக்கள் தாக்கியதிலும் காயமடைந்த அனைவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு