×

திண்டிவனத்தில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் அதிரடி கைது

திண்டிவனம், மார்ச் 20: திண்டிவனத்தில் மூதாட்டியிடம் வழிப்பறி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் காவல் நிலைய ஆய்வாளர் கலைச்செல்வி தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிருஷ்ணப்பிள்ளை வீதியில், சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மயிலம் அடுத்த வைரம்பேட்டையை சேர்ந்த அர்ஜூனன் மகன் ஸ்ரீதர் (எ) முனுசாமி (38) என்பதும், கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஈஸ்வரன் கோயில் தெருவில் நடைப்பயிற்சி சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் தங்க செயினை பறித்து சென்றதாகவும், ரோசணை பகுதியில் 2 பவுன் செயின் வழிப்பறி செய்ததாகவும் ஒப்புக்கொண்டார். அதன் பேரில் போலீசார், அவரை கைது செய்து, அவரிடமிருந்து மொத்தம் 6 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Dindivan ,
× RELATED திண்டிவனத்தில் தேனீக்கள் கொட்டியதில்...