×

பள்ளிக் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு: ஆய்வு நாடகங்களை விடுத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க – நயினார் நாகேந்திரன்!

சென்னை: பள்ளியில், குடிநீர் தொட்டிக்குள் மனித மலக்கழிவு கண்டெடுக்கப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்;

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவர்கள் பருகும் குடிநீர் தொட்டிக்குள் மனித மலக்கழிவு கண்டெடுக்கப்பட்ட செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். கல்வி கற்கும் ஆலயத்தில், பிஞ்சு குழந்தைகளின் உயிருடன் விளையாடும் இத்தகைய மனிதாபிமானமற்ற செயலை எவர் செய்திருந்தாலும் அதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழகத்தையே உலுக்கிய வேங்கைவயல் வடு மறைவதற்கு முன்னரே, மீண்டும் ஒரு கொடுமை நிகழ்ந்திருப்பது கவலை அளிக்கிறது. அரசுப் பள்ளிகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததே இதற்கு மிக முக்கிய காரணமாகும். எனவே இனியாவது தவெக அமைச்சர்கள் கேமராக்களுடன் பள்ளிகளில் ‘ஆய்வு நாடகம்’ நடத்துவதை விடுத்து, மாணவர்களின் பாதுகாப்பிற்கு உருப்படியான (உறுதியான) தீர்வை வழங்க வேண்டும்.

மேலும், இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து, அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளி குடிநீர் தொட்டிகளையும் முறையாகப் பரிசோதித்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Nayinar Nagendran ,Chennai ,BJP ,Ayyalur Government Secondary School ,Dindigul District ,
× RELATED கட்சியின் மூத்த தலைவர்கள், சட்ட...