×

3,500 கனஅடி நீரை திறந்துவிட உத்தரவான நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க கூடாது: காங்கிரஸ் அரசை மிரட்டும் பாஜக மாஜி முதல்வர்

பெங்களூரு: காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு, தமிழகத்திற்கு நாள்தோறும் 3,500 கனஅடி நீரை 15 நாட்களுக்கு திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, மழைப் பற்றாக்குறையால் அணைகளில் நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிராக கர்நாடகா முழுவதும் விவசாயிகள் அமைப்புகளும், கன்னட அமைப்புகளும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில்தான், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முன்னாள் பாஜக முதல்வரும், எம்.பி.யுமான பசவராஜ் பொம்மை, எந்தச் சூழலிலும் தமிழகத்திற்கு காவேரி நீரைத் திறந்து விடக் கூடாது என்று மாநில அரசைக் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அவர் கூறுகையில், ‘கர்நாடக அணைகளில் தற்போதுள்ள நீரானது கர்நாடகாவின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய மட்டுமே போதுமானது. எனவே, எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்குமுறைக் குழுவின் முன் கர்நாடகாவின் நிலவரத்தை உறுதியாக எடுத்துரைக்க அம்மாநில சட்டக் குழு தவறிவிட்டது.

எங்கள் ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற உத்தரவுகள் வந்தபோது, நாங்கள் உறுதியாக நின்று தண்ணீரைத் திறக்கவில்லை. தற்போதைய காங்கிரஸ் அரசும் விவசாயிகள் மற்றும் குடிநீர்த் தேவையைப் பாதுகாக்க கடுமையான நிலையை எடுத்து, சட்டப் போராட்டத்தைத் தொடர வேண்டும். இப்பிரச்னை குறித்து டி.கே.சிவகுமாரிடமும் பேசியுள்ளேன்’ என்றார்.

Tags : Cauvery ,Nadu ,BJP ,CM ,Congress government ,Bengaluru ,Cauvery Water Regulatory Committee ,Karnataka government ,Tamil Nadu ,Tamil Nadu… ,
× RELATED திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்