×

பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கூட்டுறவு சங்கம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

 

சத்தியமங்கலம், ஜூலை 29: புஞ்சை புளியம்பட்டி அருகே பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கூட்டுறவு சங்கம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள காராப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அப்பகுதி விவசாயிகள் பயிர் கடன் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். கடுமையான வறட்சி நிலவும் அப்பகுதியில் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்று விவசாயம் செய்து வந்த நிலையில் எதிர்பார்த்த அளவு வேளாண் தொழிலில் லாபம் ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டதால் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நிலையில், நேற்று காராப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முன்பு அப்பகுதி விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் நடராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ஜோதி அருணாச்சலம், விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

 

Tags : Sathyamangalam ,Punjai Puliyampatti ,Karapadi Primary Agricultural Cooperative Credit Society ,Punjai Puliyampatti… ,
× RELATED தண்ணீர் வரத்து குறைவால் களையிழந்த கொடுமுடி காவிரி ஆறு