×

பருவமழை பொய்த்ததால் ஆழ்துளை கிணறுகள் வற்றியது; குடிநீர் இன்றி தவிக்கும் கடம்பூர் மலை கிராம மக்கள்

 

சத்தியமங்கலம், ஆக.1: கடம்பூர் மலைப்பகுதியில் பருவமழை பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டதோடு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றியதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள குத்தியாலத்தூர், குன்றி, கூத்தம்பாளையம் ஆகிய 3 கிராம ஊராட்சிகளில் 70 மலை கிராமங்கள் உள்ளன. மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் விவசாயம் மற்றும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில், பருவமழை பொய்த்ததால் குளம், குட்டைகள், நீரோடைகள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது.

இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் விவசாய பயன்பாடு மற்றும் குடிநீர் தேவைக்கான கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர் வற்றியது.
விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலுக்கு அடிப்படை தேவை தண்ணீர். மழை இல்லாததால் விவசாயம் கடுமையாகபாதிக்கப்பட்டதோடு மலை கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பருவ மழை பெய்யாததால் மலை கிராம விவசாயிகள் வழக்கமாக மானாவாரிப் பயிராக மக்காச்சோளம் மற்றும் மரவள்ளி கிழங்கு பயிரிட முடியாமல் தவித்து வருகின்றனர்.

 

Tags : Kadambur hill ,Sathyamangalam ,Kadambur hill region ,Kudhiyalathur ,Kunri ,Koothampalayam ,Sathyamangalam… ,
× RELATED தண்ணீர் வரத்து குறைவால் களையிழந்த கொடுமுடி காவிரி ஆறு