×

வேலூர் விமான நிலையம் திறக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்: ஒன்றிய இணை அமைச்சர் முருகன் பேட்டி

 

வேலூர், ஜூலை 27: வேலூர் விமான நிலையம் திறக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று, வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். வேலூர் சங்கரன்பாளையத்தில் நேற்று நடந்த மனதின் குரல் நிகழ்ச்சியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று பேசினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: இந்தியா முழுவதும் மக்களுக்கு செய்கின்ற சேவைகள், பணிகள் மற்றும் அவர்களின் சாதனைகளை உலகம் அறிய செய்வதே மனதின் குரல் நிகழ்ச்சியின் நோக்கமாக பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றி வருகிறார்.

கார்கில் வெற்றி தினத்தைக் கொண்டாடுகின்ற இந்தத் தருணத்தில், கார்கில் வெற்றி தினத்தில் பங்களித்த ராணுவ வீரர்களைப் போற்றியும், அவர்களுக்கு மரியாதை செலுத்தியும், அவர்களின் வீரத்தை உலகிற்கு மனதின் குரல் நிகழ்ச்சியில் எடுத்துரைத்துள்ளார். இந்தியாவை சேர்ந்த விளையாட்டு வீரர்களுடைய பங்களிப்பைப் பற்றியும், அதேபோல் ஜப்பான் பேட்மிண்டன் போட்டியில் வீராங்கனை சிந்து வெற்றி பெற்றதையும் பேசியிருக்கிறார். மரம் நடுதலின் அவசியம், நீரைச் சேமிப்பதன் முக்கியத்துவம், உள்ளூர் பொருட்களை ஊக்குவித்தல் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பொருட்களை வெளி உலகத்திற்கு எடுத்துச் செல்வது போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

பிஎம் கிசான் திட்டத்தில் 11 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கிலேயே செலுத்தப்படுகிறது. விரைவில் வேலூர் விமான நிலையம் திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினர். நிகழ்ச்சியில் பாஜ நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags : Vellore Airport ,Union Minister of State ,Murugan ,Vellore ,L. Murugan ,Sankaranpalayam ,Union Minister of State… ,
× RELATED 236 வெற்றி பள்ளிகளில் மாணவர்களுக்கு...