×

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மூதாட்டி கால் விரலை கடித்து குதறிய எலி: வீடியோ வைரல்

திருச்சி: திருச்சி பொன்மலை அருகே ஆலத்தூரை சேர்ந்த ரத்தினம் மனைவி தமிழ்க்கொடி(69). இவருக்கு 4 மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன் வீட்டில் தவறி விழுந்ததில் தமிழ்க்கொடிக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரத்துக்கு முன் தமிழ்க்கொடிக்கு அறுவை சிகிச்சை முடிந்தது. பழைய கட்டிடத்தில் உள்ள 500 வது வார்டில் தங்க வைக்கப்பட்ட தமிழ்க்கொடிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இவருக்கு உதவியாக அவரது மகன் இருந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கட்டிலில் படுத்திருந்த தமிழ்க்கொடியின் இடது கால் கட்டை விரலில் எலி கடித்து ரத்தம் கொட்டியது. சர்க்கரை ேநாய் இருப்பதால் எலி கடித்தது தமிழ்க்கொடிக்கு தெரியவில்லை. நேற்று காலை 5 மணியளவில் மகன் எழுந்து பார்த்தபோது தமிழ்க்கொடியின் கால் கட்டை விரலில் எலி கடித்து ரத்தம் வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனை டீன் குமரவேல் வந்து விசாரித்தார். உடனடியாக தமிழ்க்கொடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஐசியூ வார்டில் தமிழ்க்கொடியை அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி அரசு மருத்துவமனை பழைய கட்டிடத்தில் வார்டுகளில் எலி தொல்லை அதிகமாக உள்ளது. இதுகுறித்து டாக்டர்களிடம் நோயாளிகள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் மூதாட்டி கால் கட்டை விரலை எலி கடித்து குதறியுள்ளது பொதுமக்கள், நோயாளிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலிகள் நடமாட்டத்தால் அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக நோயாளிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் மூதாட்டி கால் கட்டை விரலில் எலி கடித்து காயமடைந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : Trichy Government Hospital ,Trichy ,Rathinam ,Tamilkodi ,Alathur ,Ponmalai ,
× RELATED ஜனநாயகன் படம் தீபாவளி, பொங்கல்...