டெல்லி: ரயில் டிக்கெட் முன்பதிவை மக்கள் எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் IRCTC இணையதளத்தின் புதிய பதிப்பை ரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் முன்பதிவின்போது ஏற்படும் சர்வர் கோளாறுகள், கேப்ச்சா பதிவு செய்வது, அதிகமான ஓடிபி எண்கள் கேட்பது, திடீரென வலைதளம் இயங்காமல் தேங்கி நிற்பது போன்ற குறைகள் அடிக்கடி ஏற்பட்டன. இதனால், பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, குறிப்பாக தட்கல் டிக்கெட் முன்பதிவின்போது கடும் சிரமங்களைச் சந்தித்தனர்.
இந்நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவை எளிமைப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட IRCTC இணையதள சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 40 ஆண்டுகால PRS முறைக்கு மாற்றாக கிளவுட் முறைப்படி டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். IRCTCல் நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியும். அதற்கு ஏற்றார்போல் சர்வர்கள் வலுப்படுத்தப்பட்டு, வலைதளத்தின் வேகம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கடும் டிராஃபிக் நேரம் எனச் சொல்லப்படும் பண்டிகை முன்பதிவு நாட்கள், தட்கல் முன்பதிவு, வார இறுதிநாட்கள் முன்பதிவு, நீண்ட விடுமுறை நாட்கள் முன்பதிவு ஆகிய காலகட்டங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பல்வேறு சிக்கல்களை பயணிகள் சந்தித்திருக்கலாம்.
அவை அனைத்தும் சரிசெய்யப்பட்டதால், இனிமேல் பயணிகள் எளிதாக வலைதளத்தை கையாண்டு விரைந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
