டெல்லி: இந்திய ரயில்வேக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது பற்றி அதிச்சியூட்டும் தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவலின்படி, சுமார் 1,068 ஹெக்டேருக்கும் அதிகமான இந்திய ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது.
1,068 ஹெக்டேர் என்பது ஏறக்குறைய 42 நரேந்திர மோடி மைதானங்கள் அல்லது சுமார் 1,496 ஃபிஃபா தரத்திலான கால்பந்து மைதானங்களுக்கு சமமானது என்பதே மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய செய்தியாகும். கொள்ளளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம், சுமார் 63 ஏக்கர் அல்லது ஏறத்தாழ 25.5 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள மொத்தப் பரப்பளவு கிட்டத்தட்ட 32% அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற இந்த பதிலில் ரயில்வே வாரியத்தின் தரவுகளின்படி, ஆக்கிரமிக்கப்பட்ட ரயில்வே நிலத்தின் அளவு 2020-21-ல் 810.31 ஹெக்டேர்களாக இருந்த நிலையில், 2024-25-ல் அது 1,068.54 ஹெக்டேர்களாக அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் 98.02 ஹெக்டேர் நிலம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆக்கிரமிப்புகளை அகற்றும் முயற்சிகளை விடப் புதிய ஆக்கிரமிப்புகள் பெருகி வருவது தெரிய வந்துள்ளது.
