பார்த்தீனியம், லேண்டானா களை செடிகள் அதிகரிப்பு வன விலங்குகள், கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

*ஆபத்தான தாவரங்களை அழிக்க தொலைநோக்கு திட்டம் உருவாக்கப்படுமா?

ஊட்டி : நீலகிரி கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிகரிக்கும் பார்த்தீனியம் மற்றும் லேண்டானா களை செடிகளால் வன விலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் நீடிக்கிறது.

பார்த்தீனியம் எனப்படும் அயல்நாட்டு களை செடியானது 1950-களில் கோதுமையுடன் கலந்து இந்தியாவிற்குள் ஊடுருவியது. இந்த செடியானது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவி கிடக்கின்றன.

இந்த தாவரத்தால் மனிதர்களுக்கு சுவாச கோளாறுகள் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் மற்றும் ஒவ்வாமை ஏற்படுத்துகின்றன. உடல்மீது படும்போது ஒருவிதமான அரிப்பு ஏற்படுகிறது. பார்த்தீனியம் செடியின் விதைகள் காற்றில் பரவி செழித்து வளர்கின்றன.

இந்த செடி வளரும் இடங்களில் வேறு எந்த தாவரம், புற்கள் போன்றவை வளருவதில்லை. இதனை உட்கொள்ளும் கால்நடைகளின் பாலில் கசப்பு தன்மை உண்டாகிறது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை முதுமலை புலிகள் காப்பகம், நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிகளவு வளர்ந்துள்ளன.

இதேபோல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அழகுத்தாவரமாக வளர்க்கப்பட்ட லேண்டானா எனப்படும் உன்னி செடிகள் நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட குந்தா, குன்னூர் வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதிகள், சாலையோர பகுதிகளை அதிகளவு ஆக்கிரமித்துள்ளது. இவற்றால் தாவர உன்னிகளான மான், காட்டுமாடு, யானை போன்றவற்றிற்கும் வளர்ப்பு கால்நடைகளுக்கும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக பார்த்தீனியம், லேண்டானா ஆகியவை செழித்து வளர்ந்துள்ளன. குறிப்பாக உன்னி செடிகளில் உன்னி பழங்கள் அதிகளவு காய்த்துள்ளன. இவை காய்ந்து நிலத்தில் விழும் போது மீண்டும் புதிதாக செடி முளைக்க கூடிய நிலையும் உள்ளது. எனவே லேண்டானா மற்றும் பார்த்தீனியம் ெசடிகளை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘நீலகிாி மாவட்டம் முழுவதுமே வனப்பகுதிகள், சாலையோரங்கள் என அனைத்து பகுதிகளிலும் பார்த்தீனியம் களை செடி ஆக்கிரமித்து வளர்ந்துள்ளது. இதேபோல் லேண்டானாவும் நன்கு வளர்ந்துள்ளது.

மற்ற தாவரங்களின் வளர்ச்சியை தடுத்து வருவதால் வன விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு அவை உணவு தேடி அலைய கூடிய அவல நிலை நீடிக்கிறது. வீட்டு கால்நடைகளுக்கும் இதே நிலை தான் உள்ளது. எனவே இதற்கு சிறப்பு கவனம் செலுத்தி இவற்றின் வளர்ச்சியை கட்டுபடுத்தி அழிக்க தொலை நோக்கு திட்டத்தை வகுக்க வேண்டும். மாநில அரசும் தனிகவனம் செலுத்த வேண்டும்’’ என்றனர்.

Related Stories: