புதுடெல்லி: இந்தியாவில் தினமும் 25 அரசு பள்ளிகள் மூடப்படுவதாக நிதிஆயோக் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அரசு பள்ளிகளின் செயல்பாடு, மாணவர் ேசர்க்கை, இடைநிற்றல் உள்ளிட்ட விவரங்களை நிதிஆயோக் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது;
* கடந்த பத்தாண்டுகளில் இந்தியா முழுவதும் 94,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது
* கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் தினமும் சராசரியாக 25 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 2.26 கோடி குறைந்ததே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
* அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 2014-15-ல் 11.07 லட்சமாக இருந்த நிலையில், 2024-25-ல் 10.13 லட்சமாகக் குறைந்துள்ளது.
* இதே காலகட்டத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கையும் 83,000-லிருந்து 79,000-ஆகக் குறைந்துள்ளது. அதே வேளையில், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை இந்த தசாப்தத்தில் 2.88 லட்சத்திலிருந்து 3.39 லட்சமாக அதிகரித்துள்ளது.
* அனைத்து விதமான பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை 2014-15-ல் 26.95 கோடியாக இருந்த நிலையில், 2024-25-ல் 24.69 கோடியாகக் குறைந்துள்ளது.
* தொடக்க வகுப்புகளில் பள்ளி இடைநிற்றல் விகிதம் 0.3 சதவீதமாகக் குறைவாக இருந்தபோதிலும், உயர்நிலைக் கல்வியில் 11.5 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் விகிதமும் 2014-15-ல் 91.58 சதவீதத்திலிருந்து 2024-25-ல் 86.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
* புதுச்சேரி மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் 99.6 சதவீத விகிதத்தைப் பதிவு செய்துள்ள நிலையில், மேகாலயா, பீகார், மிசோரம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் குறைவான விகிதங்களையே பதிவு செய்துள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
