கொல்கத்தா: மேற்குவங்கத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜவிடம் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்ததை தொடர்ந்து, ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி குழுவினர் திரிணாமுல் கட்சியில் இருந்து பிரிந்து சென்று கட்சி சின்னம் மற்றும் வங்கி கணக்குகளின் மீது உரிமை கோரியுள்ளனர். மேலும் கட்சியின் நிதி ஆதாரங்கள் குறித்த விசாரணை கோரி அதிருப்தி திரிணாமுல் எம்எல்ஏக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் நேற்று முன்தினம் கொல்கத்தாவின் ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இதில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி கட்சியின் தலைவராக இருந்த காலத்தில், 2023ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2026ம் ஆண்டு ஜூன் வரையிலான இடைப்பட்ட காலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளில் இருந்து ‘கேர்வெல் ஏவியேஷன் இந்தியா’ என்ற தனியார் விமான நிறுவனத்தின் கணக்குகளுக்கு சுமார் 160 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
கேர்வெல் ஏவியேஷன் நிறுவனம் 82.96 கோடி ரூபாயை மற்றொரு துணை நிறுவனத்திற்கு மாற்றியுள்ளது. இதில் 112 கோடி ரூபாய் எம்ப்ரேயர் லெகசி 600 ரக விமானம் மற்றும் அகஸ்டா 109 எஸ்பி ரக ஹெலிகாப்டர் ஆகியவற்றை வாங்குவதற்கு பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு வாங்கப்பட்ட விமானம் மற்றும் ஹெலிகாப்டரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வாடகைக்கு விட்டு இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
நிதி முறைகேடு தொடர்பான சோதனைகளை தொடர்ந்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 3 வங்கிகளில் உள்ள வைப்புத்தொகை ரூ.440கோடியை முடக்குவதற்கு அமலாக்கத்துறை இயக்குனரம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் இருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை.
