நாகப்பட்டினம்: நாகை கடற்கரையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் திதி கொடுத்த நூதன போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார். தேர்தல் முடிந்து விஜய் முதல்வராக பொறுப்பேற்று விட்டார். ஆனால் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள் டெல்டா மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக பயிர் கடனை முழுமையாக ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு இறந்து விட்டது என கூறி நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் திதி கொடுக்கும் நூதன போராட்டம் நேற்று காலை நடந்தது. மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். கடற்கரையில் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது போல் விவசாயிகள் திதி கொடுத்தனர்.
தேர்தல் அறிக்கையில் கூறியவாறு கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை ஒன்றிய, மாநில அரசு வேடிக்கை பார்க்க கூடாது என்றும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு நிலவியது.
