×

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மழையால் சேதம்: கடையத்தில் மின் கட்டண வசூல் மையம் மூடல்

 

கடையம், ஜூன் 30: கடையத்தில் மின்கட்டண வசூல் மையம் கட்டிடம் மழையால் சேதமடைந்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூட்டப்பட்டது. விரைவில் கட்டிடத்தை சீரமைத்து திறக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். கடையம் பெருமாள் கோவில் பின்புறம் மின்கட்டண வசூல் மையம் செயல்பட்டு வந்தது. இதனை கடையம், ரவணசமுத்திரம், மந்தியூர், ராஜாங்கபுரம், கோவிந்தப்பேரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால் கட்டிடம் முழுமையாகப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மின் கட்டண வசூல் மையம் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டேறிப்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தால் கிராம மக்கள் 10 கிமீ தூரம் வரை அலைய வேண்டியுள்ளது. இப்பகுதிக்கு போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் முதியோர், பெண்கள் மற்றும் மாணவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். மின்கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது. இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.

இப் பரச்னைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் மற்றும் மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மக்கள் கூறுகையில், ‘எங்கள் கிராம மக்களின் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்யும் இந்த வசூல் மையத்தை மீண்டும் கடையத்தில் திறக்க வேண்டும். இல்லையென்றால், மின்வாரிய அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்’ என்றனர்.

Tags : Kadayam ,Perumal Temple… ,
× RELATED கரூர் பகுதியில் கண்களை பதம்பார்க்கும் காற்று