மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு இன்று (ஜூன் 29) திங்கள்கிழமை வினாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,000-இல் இருந்து 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டால் மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்வரை குடிநீருக்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். காவிரியில் செயல்படுத்தப்பட்டு வரும் மேட்டூர்-ஆத்தூர் கூட்டு குடிநீர் திட்டம், சேலம் மாநகராட்சி குடிநீர் திட்டம், வேலூர் கூட்டு குடிநீர் திட்டம், காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம், மேட்டூர் நகராட்சி தனி குடிநீர் திட்டம், கோனூர் பி.என்.பட்டி, வீரக்கல் புதூர் கூட்டு குடிநீர் திட்டம், காவேரிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவைகளுக்காகவும் மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 2,000 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்படும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக திங்கள்கிழமை காலை 8 மணிமுதல் மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1000 கனஅடியிலிருந்து வினாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 146 கனஅடியிலிருந்து 158 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிந்து திறக்கப்படும் நீரின் அளவை விட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர் மட்டம் 78.90 அடியிலிருந்து 78.81 அடியாக குறைந்தது. அணையின் நீர் இருப்பு 40.78 டி.எம்.சி.யாக உள்ளது.
