- நெல்லை அரசு பொறியியல் கல்லூரி
- தியாகராஜநகர்
- சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினம்
- கலெக்டர்
- ஆனந்த் மோகன்
தியாகராஜநகர், ஜூன் 29: நெல்லை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் ஆனந்த்மோகன் தலைமை வகித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதில் மாணவர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். போதைப்பழக்கத்திலிருந்து தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் தங்களது நண்பர்கள் மற்றும் சமூகத்தினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இளைஞர்கள் விளையாட்டு, கல்வி திறன் மேம்பாடு செயல்களில் ஆர்வமுடன் ஈடுபட்டால் போதை பழக்கத்திற்கு இடமளிக்காமல் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றார்.
நிகழ்ச்சிக்கு ராபர்ட் புரூஸ் எம்பி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்வாரிய முதுநிலை விளையாட்டு அலுவலரும் அர்ஜுனா விருதாளருமான மணத்தை கணேசன் மற்றும் நடிகர் இணை இயக்குநர் வள்ளிநாயகம் ஆகியோர் போதைப்பழக்கத்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவது குறித்தும் மாணவர்கள் விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு சாதனை படைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறப்புரையாற்றினர். முன்னதாக சர்வதேச போதை பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் ஆனந்த மோகன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை, கோட்டாட்சியர் பிரியா, உதவி ஆணையர் ரகுபதி, கோட்ட கலால் அலுவலர் கோமதி, சேரன்மகாதேவி கோட்ட கலால் அலுவலர் இசைவாணி, பாளையங்கோட்டை தாசில்தார் மாரி ராஜா, மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். முன்னதாக மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்
