×

நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழா 6ம் நாளில் சுவாமி யானை வாகனத்திலும் அம்பாள் அன்ன வாகனத்திலும் வீதியுலா

 

நெல்லை, ஜூன் 26: நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழாவின் 6வது நாளான நேற்று இரவு சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் வீதியுலா வந்து அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். பிரசித்திபெற்ற நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப் ெபருந்திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இந்தாண்டுக்கான ஆனிப்பெருந்திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. விழாவில் நாளை மறுநாள் 28ம் தேதி (ஞாயிறு) தேரோட்டம் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி- அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது.

அத்துடன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளலைத்தொடர்ந்து வீதியுலா நடந்து வருகிறது. 6வது நாளான நேற்று காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதையடுத்து அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்தில் சுவாமியும், அன்ன வாகனத்தில் அம்பாளும் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து இரவு 8 மணிக்கும் அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்தில் சுவாமியும், அன்ன வாகனத்தில் அம்பாளும் திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு நின்றசீர் நெடுமாறன் கலையரங்கத்தில் நேற்று மாலை திரிபுரசுந்தரி பக்தி சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் கூட்டு வழிபாடு, பாலகிருஷ்ணனின் பக்தி சொற்பொழிவு, மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி இடம் பெற்றது.

 

Tags : Nellaiappar Temple Ani Perundhiru festival ,Lord Swamiji ,Goddess Anna Vahanam ,Nellai ,Nellai… ,
× RELATED தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.7.49...