×

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2001-2006ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 384 ரூபாய் சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் 2019ம் ஆண்டு தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கின் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக 2025ம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்து குவிப்பு வழக்கை மதுரையில் உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.

Tags : Anitha Radhakrishnan ,Madras High Court ,Chennai ,Thoothukudi ,court ,AIADMK government ,
× RELATED பணி நியமன ஆணை வழங்க வலியுறுத்தி...