×

ஒன்றிய அரசு கமிட்டி முன் கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் ஆஜர்: முடக்கத்திற்கான காரணம் பற்றி விளக்கவில்லை என குற்றச்சாட்டு

புதுடெல்லி: கரப்பான் பூச்சி எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டதற்கான காரணம் பற்றி அதிகாரிகள் விளக்கம் அளிக்கவில்லை என்று அந்த கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே குற்றம் சாட்டினார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறையில் ஏற்படும் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அமைச்சர் பதவி விலகாவிட்டால் நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் நேற்று 5வது நாளை எட்டியது. கரப்பான் பூச்சி கட்சியின் அனைத்து கணக்குகளும் முடக்கப்பட்டதாக அதன் நிறுவனர் அபிஜித் திப்கே புகார் கூறியிருந்தார். இந்த நிலையில், டெல்லியில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் குழுவின் முன் அபிஜித் திப்கே நேற்று ஆஜாரானார்.

இது குறித்து திப் கே கூறுகையில் எக்ஸ் கணக்கு முடக்கத்திற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்கவில்லை. நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் ஏன் இதேபோன்ற ரகசியம் காக்கப்படவில்லை. எல்லாமே ரகசியமானது; நீட் வினாத்தாளையும் நீங்கள் ரகசியமாக வைத்திருக்க வேண்டும். அது ஏன் கசிந்தது? அது தடுக்கப்பட்டிருந்தால் இந்த தற்கொலைகள் நடந்திருக்காது.

தங்கள் குரல்களை ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கை இது என்றும், பாகிஸ்தானில் உள்ளவர்கள் இந்தக் கணக்குகளைப் பின்தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாங்கள் வாக்குகளைக் கேட்கிறோமா? நாங்கள் நீதியைக் கேட்கிறோம். நாங்கள் வரி செலுத்துவோர், எங்கள் பெற்றோரும் வரி செலுத்துவோர். ஆனால் நீங்கள் எங்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கிறீர்கள். இது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்றார்.

Tags : Karapanpoochchi Party ,Union Government Committee ,New Delhi ,Abhijit Dipke ,Karapanpoochchi X ,Union Government ,NEET ,
× RELATED கிரெடிட் கார்டு மோசடிகள் இழந்த பணத்தை...