சிவகங்கை, ஜூன் 23: சிவகங்கை ரயில்வே ஸ்டேசன் அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை ரயில்வே ஸ்டேசன் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. ரயில்வே ஸ்டேசன், கல்வி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையில் உள்ள பகுதியில் இக்கடை அமைந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
மாலை நேரங்களில் மதுபானக் கடையில் மது அருந்திவிட்டு வெளியே வரும் சிலர் சாலையோரங்களில் மதுபோதையில் தகாத முறையில் நடந்து கொள்வதால் பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இக்கடையை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
