திருமயம், ஜூன் 22: திருமயத்தில் பொதுமக்கள் குடியிருப்பு, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பொதுப்பணித்துறை, காவல்துறைக்கு சொந்தமான பாழடைந்த வீடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா அலுவலகத்தின் மேற்கு புறம் நீதிபதி குடியிருப்பு அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இது கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட வீடுகள் என கூறப்படுகிறது. பெரும்பாலும் வீடுகள் அனைத்தும் ஓடுகள் மூலம் கட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக யாரும் சம்பந்தப்பட்ட வீடுகளை பயன்படுத்தாததால் வீடு சேதம் அடைந்து வீடுகள் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு புதர் செடிகளும், சீமை கருவேல மரங்களும் மண்டி காடு போல் காட்சியளிக்கிறது. அதேசமயம் இதன் வடக்கு பகுதியில் கட்டப்பட்டுள்ள காவலர் அடுக்குமாடி குடியிருப்புகளும் பயன்படுத்தப்படாமல் சேதமடைந்து காணப்படுகிறது.
