சென்னை: வானிலை மேகமூட்டத்துடன், அதிக ஈரப்பதத்துடன் காணப்படும். இதனால் வானத்தில் நீல நிறம் தெரியாமல் சாம்பல் நிறத்தில் மப்பும் மந்தாரமுமான சூழல் நிலவும். பலத்த கடல் காற்று வீசுவதால் குளிர்ந்த சூழல் நிலவும். சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை எனவும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் சென்னைக்கு அருகே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் ஒரு பெரிய அடர்ந்த மேகக்கூட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் முழுமையாக மேகமூட்டத்துடனும், அதிக ஈரப்பதத்துடனும் காணப்படுகிறது. மேகமூட்டம் காரணமாக சூரிய வெளிச்சம் நேரடியாக இல்லாததால், பகல் நேர வெப்பநிலை வழம்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது..
சென்னையில் தற்போது சூழ்ந்துள்ள கருமேகங்களால் பெரிய அளவில் கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை மையம் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசுவதால் சென்னை மக்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்
