ஊட்டி : ஊட்டி ரோஜா பூங்காவில் மினியேச்சர் வகை ரோஜா பூக்கள் மற்றும் அரிய வகைய ரோஜா மலரான பச்சை ரோஜா பூத்துள்ளதால், சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசித்து செல்கின்றனர்.
ஊட்டி ரோஜா பூங்காவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா வகைகளும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகளும் உள்ளன.வனப்பகுதிகளில் காணப்படும் ரோஜா செடிகள் மற்றும் நாட்டு வகை ரோஜா மலர் செடிகளும் நடவு செய்யப்பட்டுள்ளன.
கோடை சீசன்போது இந்த ரோஜா செடிகள் அனைத்தும் கவாத்து செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக்குலுங்கும். கோடை சீசனை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த மலர் செடிகளில் மலர்கள் பூத்து காணப்பட்டது.சீசன் முடிந்த நிலையில் பெரும்பாலான செடிகளில் இருந்த மலர்கள் உதிர்ந்து விட்டன. இதனால் தற்போது இந்த பூங்காவில் அனைத்து செடிகளிலும் மலர்கள் இன்றி காணப்படுகின்றன.
ஒரு சில செடிகளில் மட்டுமே குறைந்த அளவு மலர்கள் காணப்படுகிறது. அதே சமயம், பூங்கா நுழைவு வாயில் பகுதியில் உள்ள பச்சை நிற ரோஜா செடிகளில் பச்சை நிற ரோஜா மலர்கள் பூத்துள்ளன. இந்த அரிய வகை ரோஜா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வதுடன், அதனை புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.
