சென்னிமலை, ஜூன் 19: பவானிசாகர் அணையில் இருந்து முறையற்ற நீர் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதாக நீர்வளத்துறை மீது கீழ்பவானி பாசன விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் சுமார் 1 லட்சம் ஏக்கர் நேரடியாகவும், மேலும் 1 லட்சம் ஏக்கர் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்திலும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டும் ஆகஸ்ட் மாதத்தில் வழக்கம்போல் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் வரும் என்ற நம்பிக்கையில் பாசன பகுதிகளில் உள்ள விவசாயிகள் மஞ்சள் பயிரிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல விவசாயிகள் கரும்பு மற்றும் குச்சி கிழங்குகள் பயிர் செய்தும் தண்ணீரை எதிர்பார்த்து காத்துள்ளனர். ஆனால், விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் பவானிசாகர் அணையில் இருந்து முறையற்ற முறையில் நீரேற்று பாசனங்களுக்கு தண்ணீரை திறந்து விடுவதன் மூலம் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
