திருவாரூர்: திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற இளம் பெண்ணிடம் தவெக ஒன்றிய செயலாளர் இரட்டை அர்த்தத்தில் கிண்டலாகப் பேசி ஈவ் டீசிங் செய்ததாக தனது நண்பருடன் கைது செய்யப்பட்டுள்ளார். திருத்துறைப்பூண்டி வடக்கு தவெக ஒன்றிய செயலாளர் ஆனந்த் என்கிற ஆனந்தராஜ் (24) இவரும், இவரது நண்பர் அசோக் என்பவரும் நேற்று இரவு திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்துள்ளார். அங்கு 22 வயது இளம் பெண் ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி தன் அப்பாவுக்காகக் காத்திருந்துள்ளார்.
அப்போது, ஆனந்த் அந்தப் பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் கிண்டல் செய்து ஈவ் டீசிங் செய்துள்ளார். அந்த சமயத்தில் இளம் பெண்ணின் அப்பா அங்கு வந்துவிட அவரிடம் இதைக் கூறியுள்ளார். தனியாக நிற்கும் பெண் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா எனக் கேட்டுள்ளார். இதையடுத்து வேகமாக ஆனந்தின் டூவீலரில் இருந்த சாவியை எடுத்து கொண்டு தனது மகளை அழைத்துக் கொண்டு திருவாரூர் நகர காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீஸ் ஆனந்த் அவரது நண்பர் அசோக் இருவர் மீதும் கிண்டல் செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
