சென்னை: தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சியமைத்து 38 நாட்களை கடந்துவிட்ட நிலையில், இதுவரை 150 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளதாகவும், 130 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் தவெக அரசின் முதல் ஆளுநர் உரையில் புதிதாக எந்த திட்டங்களும் இடம் பெற வில்லை. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை. இதன் மூலம் மாற்றம் கேட்டவர்களுக்கு கிடைத்துள்ளது ஏமாற்றமே என்று விமர்சித்து உள்ளார். ஆண்டுக்கு 6 சிலிண்டர் என்பது போன்ற முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிவிப்பு ஆளுநர் உரையில் இல்லை.
தவெக அரசு ஆட்சிக்கு வந்த பின் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். சிங்கப்பெண் பாதுகாப்பு படைக்கு இன்னொரு பாதுகாப்பு படை அமைக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. காவிரி நீரை பெற தவெக அரசு உரிய முயற்சி எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி உள்ளார். அதே போல் சி.வி.சண்முகத்தின் குற்றச்சாட்டுகள் தவறானவை என்று குறிப்பிட்ட அவர், என் மகன் மிதுன் அதிமுகவில் எந்த பொறுப்புக்கும் வரமாட்டார் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மிதுனுக்கு அதிமுகவில் பொறுப்பு வழங்கப்படுகிறது என்ற தகவல் தவறாக பரப்பப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
