சென்னை: குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் இனியும் தொடர்ந்தால் மக்களை திரட்டி வீதியில் இறங்கி போராடவும் திமுக தயங்காது என்று தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்டதில் அக்குழந்தை உயிரிழந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான தண்டனையை காவல்துறை பெற்றுத்தர வேண்டும். வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த சோபா மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி தொடர்கதை ஆவது கண்டிக்கத்தக்கது.
தேர்தல் பிரசாரத்தில் சட்டத்துக்கு புறம்பாக வாக்குக்கேட்பதற்கான டூல் ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதல்வர், குழந்தைகள்-பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார். சேலத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அவருடைய கட்சியைச் சேர்ந்தவர் பாலியல் தொல்லை கொடுத்தது-ஆலந்தூரில் அவரது கட்சி பிரமுகர் கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறியது – சிங்கப்பெண் படையை உருவாக்கிய சில தினங்களில் சிவகங்கையில் பெண் காவலருக்கே பாலியல் தொல்லை. இப்படி தமிழ்நாடு முழுக்க சட்டம் -ஒழுங்கு, வெண்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு செத்துக் கொண்டிருக்கிறது.
ஆட்சி அமைத்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் சட்டம் -ஒழுங்கை நிலைநாட்ட முதல்வர் எந்த ஓர் உறுதியான நடவடிக்கையையும் எடுப்பது போல தெரியவில்லை. அடுத்த கட்சி ஆட்களை பர்சேஸ் செய்யும் நேரத்தில், கொஞ்சமாவது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும். தமிழ்நாட்டில் சீரழியும் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற உடனே காவல்துறை அதிகாரிகள் அளவில் உயர்நிலைக் கூட்டத்தை நடத்தி, மண்டல-மாவட்ட அளவிலான காவல்துறை அதிகாரிகளுக்கு குற்றங்களை தடுப்பதற்கான கடுமையான உத்தரவுகளை முதல்வர் பிறப்பிக்க வேண்டும். இனியும் இது மாதிரியான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்தால், எங்கள் தலைவரின் அனுமதியைப் பெற்று, மக்களை திரட்டி வீதியில் இறங்கி போராடவும் திமுக தயங்காது. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
