மைசூரு: மைசூரு ஆர்.டி.நகரின் தட்டகள்ளி அருகே பாக்ஸ் டென் லிக்கர் கேரேஜ் என்ற ரெஸ்ட்ரோ பார் இயங்கி வருகிறது. இந்தநிலையில், நேற்று இந்த பப்பில் திடீரென மின்கசிவால் தீப்பிடித்துள்ளது. இதை தொடர்ந்து, அந்த தீ பப் முழுவதும் பரவியது. இதில், பப்பில் வேலை செய்து வந்தவர்கள் மற்றும் பார்ட்டிக்கு வந்தவர்கள் சிக்கி கொண்டனர். கரும் புகை மூட்டத்தால் அவர்கள் வெளியே வரமுடியாமல் சிக்கி தவித்துள்ளனர்.
திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என்ன செய்வதென தெரியாமல் தவித்துள்ளனர். இந்த விபத்தில் டார்ஜிலிங்கை சேர்ந்த ஷாஹீன் (26) மற்றும் நேபாளத்தை சேர்ந்த பிரகாஷ் (24) ஆகியோர் படுகாயமடைந்து உயிரிழந்தனர். இதனிடையில், கட்டிடத்தில் சிக்கி மூச்சுவிடமுடியாமல் தவித்த பலர் பப் கட்டிடத்தின் மேல் மாடிக்கு சென்று உயிர் தப்ப அங்கிருந்து குதித்துள்ளனர். இதில், பலருக்கு எலும்பு முறிவு காயங்கள் ஏற்பட்டது.
இந்த தீவிபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் பல மணிநேரம் போராடி தீயை அணைந்த்தனர். இதையடுத்து கட்டிடத்தில் தீவிபத்து கட்டுக்குள் வந்தவுடன் உள்ளே இருந்தவர்கள் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.
