×

போலி கையெழுத்து விவகாரம்; அபிஷேக் பானர்ஜியிடம் சிஐடி விசாரணை

கொல்கத்தா: மேற்குவங்க பேரவைக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், பாஜ முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. இதையடுத்து பேரவை எதிர்க்கட்சி தலைவர், துணைத்தலைவர், தலைமை கொறாடா ஆகியோர் நியமனத்தில் மம்தா பானர்ஜி முடிவுக்கு எதிராக கட்சியில் சிலர் குரலெழுப்பியதால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தற்போது இரண்டு அணிகளாக பிளவுப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக பேரவை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு சோவந்தேப் சட்டோபாத்யாயின் பெயரை திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முன்மொழிந்தனர். கடந்த மாதம் 19ம் தேதி சோவந்தேப் சட்டோபாத்யாய்க்கு ஆதரவாக 70 பேரவை உறுப்பினர்களின் கையொப்பங்கள் அடங்கிய ஆவணம் பேரவை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால், இந்த கையொப்பங்களில் முரண்பாடுகள் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் விசாரணைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் அபிஷேக் பானர்ஜி கடந்த 11ம் தேதி ஆஜரான ார். அவரிடம் சிஐடி அதிகாரிகள் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். ஆனால் அவர் அளித்த பதிலில் சிஐடி திருப்தியடையாததால், மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சிஐடி சம்மன் அனுப்பியது. அதனை ஏற்று அபிஷேக் பானர்ஜி, கொல்கத்தாவில் உள்ள சிஐடி அலுவலகத்தில் 2ம் கட்ட விசாரணைக்கு நேற்று ஆஜரானார்.

இதேபோல் இந்த வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ குனால் கோஷிடமும் விசாரணை நடத்த சிஐடி முடிவு செய்துள்ளது. இதற்காக நேற்று பவானி பவனில் உள்ள சிஐடி அலுவலகத்தில் குனால் கோஷ் ஆஜரானார். இருவரிடமும் சிஐடியினர் பலமணி நேரம் விசாரணை நடத்தினர்.

Tags : CID ,Abhishek Banerjee ,Kolkata ,Trinamool Congress ,West Bengal Assembly elections ,BJP ,Mamata Banerjee ,
× RELATED ஒரு நாளைக்கு 200 லிட்டர் மட்டுமே...