×

புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை: பணிச்சுமை காரணமா போலீசார் விசாரணை

சென்னை: புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில், ஆயுதப்படை பெண் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் சத்யா (28). இவர் கடந்த 2017ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணிக்கு சேர்ந்து, தற்போது சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். 2024ம் ஆண்டு விஜய் (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இருவரும் பணிக்கு செல்வதால், சத்யா தனது குழந்தையை ஆவடியில் உள்ள தனது மூத்த சகோதரி அனிதா வீட்டில் விட்டுள்ளார்.

இதற்கிடையே சத்யா, ஆயுதப்படையில் உயர் அதிகாரிகள் ஒரு தலைபட்சமாக வேலை வாங்குவதாக தனது தோழிகளிடம் புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், தனது குழந்தையை சரியாக வளர்க்க முடியாததால் சகோதரி வீட்டில் விட்ட சத்யா, புதுக்கோட்டையில் உள்ள தனது தாய் வீட்டில் கடந்த வாரம் விட்டுவிட்டு வந்துள்ளார். ஒரு பக்கம் பணிச்சுமை என்றும், மறுபக்கம் தனது குழந்தையை தன்னுடன் வளர்க்க முடியாத ஏக்கத்தில் காவலர் சத்யா இருந்து வந்துள்ளார். இதனால் தனது கணவர் விஜய்யுடன் அடிக்கடி சண்டை போட்டும் வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி பணி முடிந்து வீட்டிற்கு வந்த சத்யா, தனது கணவரிடம் சகோதரி அனிதா வீட்டில் விசேஷம் நடைபெற உள்ளதால் அங்கு செல்வதாக கூறியுள்ளார். அதற்கு கணவர் விஜய் உனது அக்கா என்னை மதிக்கவில்லை, இதனால் நீ அவரது வீட்டிற்கு செல்ல கூடாது என்று கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பிறகு விஜய் நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த அவர், கதவை தட்டியும் மனைவி சத்யா கதவை திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த விஜய் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, காவலர் சத்யா புடவையில் தூக்கிட்டு உயிருக்கு போராடியது தெரியவந்தது. உடனே அவரை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சத்யா நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, பெண் காவலர் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமாக அல்லது குடும்ப பிரச்னையா என விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 ஆண்டுகளில் பெண் காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Pudupettai police station ,Chennai ,Pudupettai ,police station ,Sathya ,Tamil Nadu Police ,
× RELATED ஓரின சேர்க்கைக்கு ஒத்துழைக்காததால் பள்ளி மாணவன் கழுத்தறுத்து கொலை