சேலம், ஜூன் 9: சேலம் அருகே வேடுகத்தாம்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தமிழ் (எ) தமிழ்செல்வன் (29). ரவுடியான இவர், சேலம் செவ்வாய்பேட்டையில் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கடந்த 2021ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் வேடுகத்தாம்பட்டி பாறைவட்டம் என்ற இடத்தில் கோகுல் என்பவர் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். இங்குள்ள அறையில் நேற்று இரவு 7 மணியளவில் தமிழ்செல்வன் உள்ளிட்ட 5 பேர் ஒன்றாக அமர்ந்து மதுகுடித்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தமிழ்செல்வனை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரது தலையில் கல்லைப்போட்டு கொன்று விட்டு தப்பி சென்றுவிட்டனர். 5 பேரில் ஒருவர், தமிழ்செல்வன் கொலை செய்யப்பட்ட தகவலை தெரிவித்தார்.
தகவலறிந்து கொண்டலாம்பட்டி போலீசார் சென்று அங்கு தலை நசுங்கி கிடந்த தமிழ்செல்வனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுகுடித்துக்கொண்டிருந்தபோது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ரவுடி தமிழ்செல்வன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் பெண் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.
