×

உமீத் போர்ட்டலில் பதிவேற்றப்படாத 30,000 வக்ஃப் சொத்துகளையும் பதிவேற்றம் செய்ய தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

சென்னை: தமிழக வக்ஃப் சொத்துகளுக்கு எழுந்துள்ள பேராபத்து. உமீத் போர்ட்டலில் பதிவேற்றப்படாத 30,000 வக்ஃப் சொத்துகளையும் பதிவேற்றம் செய்ய தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏ.கே.கரீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் புதிய வக்ஃப் திருத்தச் சட்டக் கெடுபிடிகளால் தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான வக்ஃப் சொத்துகள் பறிபோகும் பேராபத்து உருவாகியுள்ள நிலையிலும், தமிழக அரசும், வக்ஃப் வாரியமும் காட்டி வரும் மெத்தனப் போக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றிய அரசின் உமீத் போர்ட்டலில் பதிவேற்றப்படாத தமிழ்நாட்டில் உள்ள சுமார் 30,000-க்கும் மேற்பட்ட வக்ஃப் சொத்துகளைப் பாதுகாக்க, வக்ஃப் தீர்ப்பாயம் மூலம் உடனடியாகக் கூடுதல் அவகாசம் பெற்று, அவற்றை பதிவேற்றம் செய்ய போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசும், வக்ஃப் வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வக்ஃப் சொத்துகள் என்பவை ஏழை, எளிய மக்களின் கல்வி, சமூக மேம்பாடு மற்றும் ஆன்மீக வழிபாட்டுத் தேவைகளுக்காக நம் முன்னோர்களால் இறைப் பொருத்தத்தை நாடி அர்ப்பணிக்கப்பட்ட சொத்துகளாகும். பல நூற்றாண்டுகளாக முஸ்லிம் சமூகத்தின் கூட்டுப் பயன்பாட்டிலும், வழிபாட்டிலும் இருந்து வரும் இந்த ஆன்மீக மற்றும் சமூகப் பாரம்பரியச் சொத்துகளைப் பாதுகாப்பதும், அதன் உரிமைகளை நிலைநாட்டுவதும் சமூக நல்லிணக்கத்தைப் பேணும் ஒரு ஜனநாயக அரசின் முதன்மைக் கடமையாகும் என்பதைத் தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

ஒன்றிய அரசின் வக்ஃப் (திருத்த) சட்டம் 2025-ன் படி, நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள், கபர்ஸ்தான்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து வக்ஃப் சொத்துகளையும் ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ ‘உமீத்’ (UMEED PORTAL) இணையதளத்தில் மறுபதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான நீதிமன்றக் காலக்கெடு கடந்த ஜூன் 6 ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ள சூழலில், தமிழக வக்ஃப் வாரியத்தின் தற்போதைய செயல்பாடுகள் மிகுந்த கவலையளிப்பதாக உள்ளன.

தமிழகத்தில், முன்பு இருந்த வக்ஃப் சொத்துகளுக்கான வம்சி (WAMSI) தளத்தில் சுமார் 45,048 வக்ஃப் சொத்துகள் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், புதிய உமீத் தளத்தில் இதுவரை வெறும் 15,067 சொத்துகள் மட்டுமே பதிவேற்றப்பட்டுள்ளன. பதிவேற்றப்பட்டவற்றிலும் வெறும் 8,015 சொத்துகள் மட்டுமே தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இன்னும் 30,000-க்கும் மேற்பட்ட வக்ஃப் சொத்துகள் உமீத் தளத்தில் பதிவேற்றப்படாமல் விடுபட்டுள்ளன. நீதிமன்ற அவகாசம் இருந்தும், இந்த விவகாரத்தில் தமிழக வக்ஃப் வாரியம் காட்டிய அலட்சியமே இந்தத் தேக்கநிலைக்குக் காரணமாகும்.

ஏற்கனவே, ‘உமீத்’ தள ஆவணச் சரிபார்ப்பைக் காரணம் காட்டி, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலின் உச்சமாக, உத்தரப் பிரதேசத்தில் 31,000-க்கும் மேற்பட்ட வக்ஃப் சொத்துகளின் பதிவுகள் மிக அவசரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்தகையதொரு பேராபத்து எக்காலத்திலும் தமிழகத்தில் அரங்கேறிவிடக் கூடாது. முறையான டிஜிட்டல் வருவாய்த்துறை ஆவணங்கள் இல்லை என்ற ஒற்றைக் காரணத்தைக் காட்டி, பாரம்பரிய பயன்பாட்டு வழி வக்ஃப் சொத்துகள் (Waqf by user) வக்ஃப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, அரசு நிலங்களாக மாற்றப்படும் ஆபத்து நம் கண்முன்னே நிற்கிறது என்பதைத் தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி சுட்டிக்காட்டியிருந்தது.

எனவே, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்த விவகாரத்தின் தீவிரத்தையும், இதன் பின்னணியில் உள்ள அரசியல் ஆபத்தையும் உணர்ந்து, வக்ஃப் சொத்துகளைப் பாதுகாக்க உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் களமிறங்க வேண்டும். உமீத் போர்ட்டலில் பதிவேற்றம் செய்யாமல் விடுபட்ட அனைத்து வக்ஃப் சொத்துகளையும் பதிவு செய்ய, வக்ஃப் தீர்ப்பாயம் மற்றும் நீதிமன்றங்கள் வாயிலாகத் தமிழக அரசு உடனடியாகக் கூடுதல் கால அவகாசத்தைப் பெற வேண்டும்.

மேலும், பாரம்பரிய பயன்பாட்டு வழி அடக்கஸ்தலங்கள், தர்காக்கள் மற்றும் மசூதிகளைக் கண்டறிந்து, அவற்றுக்குரிய பட்டா மற்றும் வருவாய் ஆவணங்களை எவ்விதத் தாமதமுமின்றி வழங்க வருவாய்த்துறை மூலம் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். தமிழக வக்ஃப் வாரியப் பதிவுகளையும், மாநில வருவாய்த்துறையின் நிலப் பதிவேடுகளையும் முன்கூட்டியே ஒப்பிட்டுப் பார்த்து, ஆவண முரண்பாடுகளை அரசு நிர்வாகமே முன்நின்று சரிசெய்து உடனடியாக உமீத் தளத்தில் பதிவேற்ற வேண்டும். மேலும், ஒன்றிய அரசின் எவ்விதத் தவறான டிஜிட்டல் ஆவணக் கெடுபிடிகளும் தமிழக வக்ஃப் நிலங்களைப் பாதிக்காத வண்ணம், அவற்றுக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பைத் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu government ,Umeet ,SDBI Party ,Chennai ,Tamil ,Nadu ,State Secretary of ,A. K. Karim ,
× RELATED தமிழகத்திற்கு வராமல் ஆந்திரா...