விஷ்ணு புராணம் காட்டும் தத்துவங்களும் நீதிகளும் என்னும் கட்டுரை கண்டேன். அவ்யக்கும், வ்யக்தம், ஸ்தூலம் சூட்சுமம் காலம் போன்ற வைகளை அழகாக விளக்கியது அருமையாக இருந்தன. விஷ்ணு புராணத்தில் இவ்வளவு அற்புதம் இருக்கிறதா என்பதை நினைக்கும் போது வியப்பாக இருந்தன.
– வண்ணை கணேசன், சென்னை.
சித்ரா பௌர்ணமியும், திருமாலிருஞ்சோலை அழகரும் என்ற இரு வழிபாடுகளின் திருவிழாக்களையும் ஒருங்கிணைத்து சீசனுக்கேற்றவாறு முத்துக்கள் முப்பதாக 14 பக்கங்களில் தந்த கோப்பு நெஞ்சார்ந்த ஈர்ப்பு!
– என்.ஜானகிராமன்,திருநெல்வேலி.
“சொக்கவைக்கும் சோமநாதபுரம்’’ என்று ஆறுபக்கத் தொகுப்பில், சிற்பங்களை தரிசிக்கச் செய்து சிறப்புக்களை (சு)வாசிக்க வைத்த அருள் தரும் ஆன்மிகம் இதழின் பாணி அருமை!
– மருதூர் மணிமாறன், திருநெல்வேலி.
சங்கடம் போக்கும் சண்டிகேஸ்வரை வணங்கி எம்போன்றோர்களின் சங்கடங்களை போக்கிட கும்பகோணம் திருவாய்ப்பறை சென்று வர ஆவலை தூண்டியது. மிக்க நன்றி. பாராட்டுக்கள்! தொடர்க! வெல்க! வளர்க! அதே போல் அட்டைப் படம் அசத்தல்.
– இரா.இராஜேஸ்வரி ராமகிருஷ்ணன்.
ஆறகமூர் அஷ்ட பைரவர்கள் நன்றாக இருந்தது. ஆங்கிலேய அதிகாரியைக் காத்த அத்தி கிரிவரதர், பழனி பிள்ளைத் தமிழ், என்றென்றும் அன்புடன், திருப்புகழ் பஞ்சபூதத் தலங்கள், அங்காரக கவர்த்தி என ஆன்மிக இதழ் சிறப்புடன் உள்ளது.
– ஏ.என். சிதம்பரம், விராச்சிலை.
புண்ணிய பூமியாம் மதுரையில் வீற்றிறுக்கும் எங்கள் ‘கள்ளழகரை’ அதிசய பார்வையோடு அட்டைப் படத்திலேயே பிரசுரித்து, எங்களுக்கு ‘அருள் பாலிக்க’ வைத்துவிட்டீர்களே.
– காசி யோக அக்ஷயா, கோவை.
ஆன்மிகம் சார்ந்த பல கேள்விகளை தேஜஸ்வி விளக்கி வருகிறார். அந்த வகையில், இந்த இதழிலும் பல கேள்விகளுக்கு விளக்கம் தந்தது மிக அருமை. குறிப்பாக, சந்திரநாடி என்னும் ஜோதிட நூல் பற்றியும், ஜாதகம் பார்த்துதான் திருமணம் செய்ய வேண்டுமா? ஆகிய கேள்விக்கான பதில்கள் மிக அற்புதம்!
– மலையப்பஸ்வாமி, தேனி.
கோடை உக்கிரத்தில் தவிக்கும் பறவைகள், விலங்குகளுக்கு நீர், உணவிடுதல், சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட வயோதிகர்களுக்கு, செருப்பு, குடை, உடை அவர்களின் இல்லாமையை அகற்றுதல் இதுவே நிஜமான ஜீவகாருண்யம் என பொறுப்பாசிரியர் தெளிவு படுத்தியிருப்பது ஆக்கப்பூர்வமானது.
– ஆர்.கே.லிங்கேசன்,மேலகிருஷ்ணன்புதூர்.
சிறப்பு மிக்க சித்திரை பெளர்ணமியில் கூடல் மாநகரம் மதுரையம் பதியில் பிரமாண்டமாய் நிகழும் கள்ளழகர் வைகை ஆற்றில் கால் பதிக்கும் வைபவத்தை அழகிய புகைப்படங்களுடன் அற்புத இறை தகவல்களுடன் விவரித்து எழுதிய கோகுலாச்சாரி அவர்கள் எழுதிய முத்தான கட்டுரைத் தொகுப்பு, அந்த சீர்மிகு வைபவத்தை கண்ணார கண்டு களித்த உணர்வும் பிரமிப்பும் ஏற்படுத்தி பரவசத்தில் ஆழ்த்தி விட்டது.
பாராட்டுக்கள். பெளர்ணமி கிரிவலம் தான் அதிக பலன்களை தருமா? என்ற ஐயத்திற்கு விடை அளிக்கும் வண்ணம் கருத்துக்களைக் கூறி கிரிவலம் எப்படி வரவேண்டும் என்பதற்கான நெறிமுறைகளை உணர்த்தி கிருஷ்ணா எழுதிய கட்டுரை கிரிவலம் செல்வோர் படிக்க வேண்டிய பயனுள்ள கருத்துரை. ஆறகழுர் அஷ்ட பைரவர்கள் குறித்து அரிய குறிப்புகளைப் படித்து அவர்களின் சிறப்புகளை அறிந்து வியந்தோம்.
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.
நமஸ்கார இறைவழிபாட்டில் பெண்கள், அண்கள் எப்படி சாஷ்டாங்கமாக வணங்க வேண்டும்? உத்தம நமஸ்காரம் எப்படி செய்ய வேண்டும் போன்ற தகவல்கள் பக்தர்களுக்கு அரிய வரப் பிரசாதம்.
– ஆர்.கே. லிங்கேசன்,மேலகருஷ்ணன்புதூர்.
