×

சர்வர் மேம்பாடு பணி காரணமாக மின்நுகர்வோருக்கான உயரழுத்த இணைய சேவை இயங்காது: மின்வாரியம் அறிவிப்பு

 

சென்னை: சர்வர் மேம்பாடு பணி காரணமாக மின்நுகர்வோருக்கான உயரழுத்த இணைய சேவை இன்று இயங்காது என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது பயன்பாட்டில் உள்ள உயர் அழுத்த பில்லிங் தரவுத்தளம் மற்றும் சர்வர் அமைப்பு, உயர் அழுத்த மின் நுகர்வோரின் பில் விவரங்கள், மீட்டர் ரீடிங் தகவல்கள், ஆன்லைன் கட்டண சேவைகள் மற்றும் மொபைல் பயன்பாடுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட முக்கியமான வருவாய் சார்ந்த கணினி அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சார்பில், உயர் அழுத்த மின் நுகர்வோருக்கான பில்லிங் சேவை மற்றும் தரவுத்தள அமைப்பை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த சேவையை மேலும் பாதுகாப்பானதாகவும், வேகமானதாகவும் மாற்றும் நோக்கில், பழைய சர்வரிலிருந்து புதிய மேம்பட்ட சர்வருக்கு தரவுத்தள மாற்று பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. புதிய அமைப்பில் ஆரக்கிள் 19 சி போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

இத்தகைய மாற்றுப் பணிகள் அரசு விடுமுறை நாளான இன்று (28-ம் தேதி) காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, உயர் அழுத்த பில்லிங் நுகர்வோர் போர்ட்டல் தற்காலிகமாக செயல்படாது. இதனால், உயர் அழுத்த மின் நுகர்வோரும், கள அலுவலர்களும் இணையதள சேவைகளை அணுக முடியாது.பொதுமக்கள் மற்றும் உயர் அழுத்த மின் நுகர்வோர் இதனை கருத்தில் கொண்டு, தங்களது பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொண்டு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த சேவை மேம்பாட்டு நடவடிக்கை, உயர் அழுத்த மின் நுகர்வோருக்கு எதிர்காலத்தில் வேகமான மற்றும் தடையற்ற சேவைகளை வழங்க உதவும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Electricity Board ,Chennai ,
× RELATED அரசுமுறை பயணமாக டெல்லி சென்ற முதல்வர் விஜய் சென்னை திரும்பினார்