திருக்காட்டுப்பள்ளி, மே 28: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி காவல் சரகம் பழையகரியப்பட்டியில் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 7 பவுன் தங்க நகைகளை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழையகரியப்பட்டி மேலத் தெருவை சேர்ந்தவர் பாபு மனைவி சிவஞானம் (28). இவர் தனது தாய், தந்தை, தங்கை, தம்பி மற்றும் குழந்தைகளுடன் திங்கள்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து சிவஞானம் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சிவஞானம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்று காவல் ஆய்வாளர் ஐயப்பன் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகிறார்.
