பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை கூத்தாண்டவர் கோயில் திருவிழா: திருநங்கைகள் விடியவிடிய ஆடிப்பாடி கொண்டாட்டம்

புவனகிரி: பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை கிராமத்தில் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் கூத்தாண்டவர் கோயில் திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அர்ச்சுனன், திரௌபதி திருக்கல்யாணம் மற்றும் சாமி வீதியுலா, மாடுபிடி சண்டை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று இரவு கோயிலில் திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்றனர். கூத்தாண்டவரை வணங்கி, நோய், நொடியின்றி நன்றாக வாழவும், நினைத்தது நிறைவேறவும் கூத்தாண்டவரை வணங்கி கோயில் பூசாரியின் கைகளால் திருநங்கைகள் தாலி கட்டி கொண்டனர். பின்னர் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, விடிய, விடிய ஆட்டமாடி உற்சாகமாக பங்கேற்றனர். விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவில் பங்கேற்ற திருநங்கைகள் கூறுகையில், ‘பிரசித்தி பெற்ற கொத்தட்டை கூத்தாண்டவர் கோயிலில் ஏதாவது வேண்டி கொண்டால் உடனடியாக நடக்கும். இந்த திருவிழாவுக்கு வருவது எங்களுக்கு மன மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் கொத்தட்டை கிராமத்தில் திருநங்கைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாக இருக்கிறது. அவற்றை ஏற்படுத்தி கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்’ என்றார்.

Related Stories: