குன்னூர், மே 25: குன்னூர் காட்டேரி பூங்காவில் மலை பயிர்கள் கண்காட்சியின் கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பூங்காவில் கடந்த 22ம் தேதி முதல் மலை பயிர்கள் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. கண்காட்சி தொடங்கிய முதல் இரண்டு நாட்கள் ஒருவழிப்பாதை போக்குவரத்து கட்டுப்பாடு காரணமாக, வெளியூர்களில் இருந்து வந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் காட்டேரி பூங்காவிற்குச் செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
இதனால் கண்காட்சி அரங்கம் முதல் இரண்டு நாட்களில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று குன்னூரில் நடைபெற்ற கடையடைப்பு போராட்டம் காரணமாக உள்ளூர் மக்கள் மற்றும் கடை வியாபாரிகள் கண்காட்சியின் இறுதி நாளான நேற்று பெருமளவில் காட்டேரி பூங்காவிற்கு வருகை தந்தனர். வெளியூர் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக இருந்தபோதிலும், உள்ளூர் மக்களின் வருகையால் பூங்கா வளாகம் மற்றும் கண்காட்சி அரங்கம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் அலைமோதியது.
