×

பக்ரீத், தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

சென்னை: பக்ரீத் பண்டிகை, தொடர் விடுமுறை ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தில் 3,505 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து மே 26ஆம் தேதி 475, மே 27ல் 845 பேருந்துகளை இயக்க திட்டம். மே 28, 29,30 ஆகிய நாட்களில் தினசரி 455 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோயம்பேட்டிலிருந்து மே 26-ஆம் தேதி 80 பேருந்துகளை இயக்க திட்டமிட்டு உள்ளதாக போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

26/05/2026 ( செய்வாய்கிழமை), 27/05/2026 (புதன்கிழமை), 28/05/2026 (வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை மற்றும் முகூர்த்தம்), 29/05/2026 (வெள்ளிகிழமை முகூர்த்தம்), 30/05/2026 (சனிக்கிழமை) மற்றும் 31/05/2026 (ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 26/05/2026 (செவ்வாய்கிழமை) அன்று 475 பேருந்துகளும், 27/05/2026 (புதன்கிழமை) அன்று 845 பேருந்துகளும், 28/05/2026 வியாழக்கிழமை, 29/05/2026 வெள்ளிக்கிழமை மற்றும் 30/05/2026 சனிக்கிழமை ஆகிய நாட்களில் தினசரி 455 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 26/05/2026 செவ்வாய்கிழமை அன்று 80 பேருந்துகளும், 27/05/2026 முதல் 30/05/2026 வரை ஒவ்வொரு நாட்களிலும் 170 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதாவரத்திலிருந்து 26/05/2026 (செவ்வாய்கிழமை) அன்று 35 பேருந்துகளும், 27/05/2026 முதல் 30/05/2026 வரை ஒவ்வொரு நாட்களிலும் 60 பேருந்துகளும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 31/06/2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 1085 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் செவ்வாய்கிழமை அன்று 13,877 பயணிகளும், புதன்கிழமை அன்று 18979 பயணிகளும், வியாழக்கிழமை அன்று 11,726 பயணிகளும், வெள்ளிக்கிழமை அன்று 10,675 பயணிகளும், சனிக்கிழமை அன்று 11,304 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 18,320 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு ww-w.tnstc.in மற் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Bakrid ,Transport Corporation ,Chennai ,Tamil Nadu ,Bakrid festival ,Kalampakkam ,
× RELATED மேகதாது அணை திட்டத்துக்கு எதிரான மனு...